தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (பிப்.17) நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத், ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய எம்பி ரவீந்திரநாத், "முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை தேர்ந்தெடுத்தது ஆண்டிபட்டி தொகுதியாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தொகுதிக்கு அதிமுக அரசால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், வாக்குகளை பெறுவதற்கு சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் விளம்பரத்திற்காக பொதுமக்களை சந்திக்க வருவார்கள்.
வாக்குகளைப் பெற்ற பிறகு மக்களுக்கான எந்தவித திட்டங்களையும் செய்து தருவதில்லை. அவர்களது ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளாக ஓடாமல் இருந்த மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டம் எனது சீரிய முயற்சியால் துரிதப்படுத்தப்பட்டு கடந்தாண்டு ஆண்டிபட்டி வரையில் தொடர் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. விரைவில் தேனி மற்றும் போடி வரையில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்கக்கோரிய வழக்கு: மார்ச் 15ஆம் தேதி விசாரணை