தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு மணல், எம் சாண்ட் மணல் அதிகளவில் கடத்தப்படுவதாக கனிம வளத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கனிம வளத்துறை இணை இயக்குனர் விஜய்குமாரன் தலைமையில், ஆர்.ஐ. கண்ணன், மதுரை மண்டல பறக்கும்படை அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை லோயர்கேம்ப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் 7 லாரிகளில், கேரளா கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள எம் சாண்ட் மணல் மற்றும் அனுமதியை விட அளவுக்கு அதிகமான ஜல்லிக் கற்களை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து லாரிகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கனிம வளத்துறை இணை இயக்குனர் விஜய்குமாரன் கூறுகையில், ''எம் சாண்ட் கேரளாவுக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆனால் ஜல்லி கொண்டு செல்ல அனுமதி உள்ளது. ஆனாலும் இவர்கள் மூன்று மற்றும் நான்கு யூனிட் கொண்டு செல்ல அனுமதி பெற்றுக்கொண்டு, ஆறு யூனிட் வரை லாரியில் கொண்டு சென்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு அபராதம் விதிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:வருவாய் அலுவலர்கள் சோதனையில் சிக்கிய கடத்தல் மணல்!