தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (73). இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் (ஜன.23) காலமானார். அதனைத் தொடர்ந்து நேற்று அவரது உடல் கோடாங்கிபட்டியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இறந்த சீதாலட்சுமிக்கு மூன்றாம் நாள் பால் தெளிக்கும் சடங்கு செய்வதற்காக இன்று (ஜன.25) காலையில் உறவினர்கள் மயானத்திற்கு சென்றுள்ளனர். அப்போது மயானத்திலிருந்த தேன் கூட்டில் இருந்து படையெடுத்த ராட்சத தேனீக்கள் அங்கிருந்தவர்களை தாக்கியது.
இதில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த திடீர் தாக்குதலில் இறந்த சீதாலட்சுமியின் சகோதரி மகனான ராஜா (40) என்பவர் மேல் சட்டை அணியாமல் இருந்தால் நூற்றுக்கணக்கான தேனீக்கள் அவரை சூழ்ந்து கடுமையாகத் தாக்கியது.
தேனீக்கள் தாக்குதலில் காயமடைந்த அனைவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவருக்கு சடங்கு செய்ய சென்றவர் தேனீக்கள் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: சவுதியில் இறந்த கணவனின் உடல் என்ன ஆனது - மாவட்ட ஆட்சியரிடத்தில் மனைவி முறையீடு!