திருப்பூர்: பிழைப்பைத் தேடி திருப்பூர் வந்த ஒடிசா தம்பதிக்கு உதவி செய்வதாக அழைத்து சென்று கத்தி முனையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பீகார் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகரில் உள்ள பனியன் நிறுவனங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தவிர தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலை தேடி திருப்பூர் வருகின்றனர். அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து 27 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் கடந்த 17ஆம் தேதி இரவு திருப்பூர் வந்துள்ளார்.
பின்னர் அவர்கள் இரவில் எங்கு செல்வது என தெரியாமல் நின்றுள்ளனர். அப்போது அங்கு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது நதிம் (24), முகமது டேனிஸ் (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் பனியன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இரவு தங்கள் அறையில் தங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். அதன் பின்னர் அவர்களுடன் சேர்ந்து ஒடிசா தம்பதி உணவருந்திவிட்டு அறையில் தூங்கி உள்ளனர். இந்நிலையில், திடீரென பீகார் இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஒடிசா பெண்ணை கணவன் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஓவியர் ஆசிரியர் கைது!
மேலும், சம்பவத்தை வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர். பின்னர் அங்கிருந்து வெளியேறிய ஒடிசா தம்பதி திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்டவர்கள் மீது உயிர் பயம் ஏற்படுத்துதல், கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.