தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக ஊரக, பேரூராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட 500க்கும் மேற்பட்ட இடங்களில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்குதல், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுதல், புகை மருந்து அடித்தல், மருந்து வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேனி அருகே உள்ள அன்னஞ்சி கிராமத்தில் நடைபெறும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பணிகளை தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் இன்று ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேனி மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் ஏழு நாட்கள் விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறிய கிருஷ்ணராஜ், சுகாதாரப் பணியாளர்கள் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.