தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே உள்ளது மஞ்சளாறு அணை. தேனி, திண்டுக்கல் ஆகிய இரு மாவட்ட பாசன நிலங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழும் இந்த அணையின் மொத்த கொள்ளளவு 57அடியாகும்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தலையாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்தின்றி காணப்பட்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த நவம்பர் ஆறாம் தேதி 51 அடியை எட்டியதால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 17 அன்று 53 அடியாக அதிகரித்ததையடுத்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று (நவ.19) முழுவதும் பெய்து வந்த கனமழையால் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவான 57அடியை விரைவில் எட்ட உள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
இதனால் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, டி.கல்லுப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, சிவஞானபுரம் உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தொடர்மழை: பிளவக்கல் அணை பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை