குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி அச்சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டும், கறுப்புச் சட்டை அணிந்தும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அதன்பின்பு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கண்களில் கறுப்புத் துணி கட்டியவாறே மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
அந்த மனுவில், 'கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி முதல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கறுப்பு சட்டை அணிந்து கோரிக்கையை வலியுறுத்தி வந்த நிலையில், நூறாவது நாளான இன்று கண்களில் கறுப்புத் துணியை கட்டிக்கொண்டு மனு அளித்துள்ளோம். மேலும், முன்னாள், இந்நாள் முதலமைச்சர்களைச் சந்தித்து வலியுறுத்தி வந்தோம். எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் தேவேந்திர குல வேளாளர் அரசாணையை வெளியிட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: '7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கவேண்டும்'