தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்நரசிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த மருதநாயகம் என்பவரின் மகள் கவிதா (வயது19). இவர் பழனியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் படித்து வந்தார்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்லூரிகள் மூடப்பட்டதையடுத்து விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு திரும்பியவர், வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்காக இலை, தழை பறிப்பதற்காக தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றின் சுவரில் வளர்ந்திருந்த ஆலமர இலைகளைப் பறிக்க முயன்ற போது, கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
சுமார் 200 அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றில் கவிதா விழுந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், கிணற்றில் விழுந்த கவிதாவை கயிறு மூலம் மேலே தூக்கி வந்தனர். ஆனால் கிணற்றில் விழுந்ததில் படுகாயம் அடைந்த மாணவி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த இராஜதானி காவல் துறையினர், அப்பகுதிக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். இறந்த கவிதாவின் உடலை உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மாணவியின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஆடுகளுக்கு இலை பறிக்க சென்ற இளம்பெண் கிணற்றில் விழுந்த சம்பவம் கதிர்நரசிங்கபுரம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு டம்ளர் பாலுக்காக மகனை சுட்டுக் கொன்ற தந்தை - மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்!