தேனி: உத்தமபாளையம் அடுத்த கோவிந்தன் பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் என்பவரது 11ஆம் வகுப்பு படிக்கும் மகன் மார்டின். இவர் தனது நண்பர்களுடன் நேற்று (அக்.23) முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, மார்ட்டின் ஆற்றில் தவறி விழுந்ததில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், உத்தமபாளையம் காவல் துறையினர் ஆகியோர் சம்பவத்திற்கு விரைந்து வந்து மார்ட்டினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அப்போது ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணியைத் தாமதப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, மார்ட்டினின் உறவினர்கள் தேனி - குமுளி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் குறித்து தேனி மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் அளித்ததன் பெயரில், அவர் கேரள மாநிலம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் நீரைக் குறைக்கக் கோரியுள்ளார். அதன் அடிப்படையில், தண்ணீர் 700 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோவை அரசு பேருந்தில் தீ விபத்து.. பயணிகள் அலறியடித்து ஓட்டம்
இருப்பினும், தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக முல்லைப் பெரியாற்றில் நீரின் வேகம் குறையாமல் இருந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (அக்.24) மார்டினை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், உத்தமபாளையம் காவல்துறையினர், தன்னார்வலர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டியன் மற்றும் வட்டாட்சியர் சந்திரசேகர் ஆகியோர் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு, மார்ட்டின் பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினர். அதன் பின்னர் தன்னார்வலர்கள் உதவியுடன் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், ஆற்றில் சிக்கி மார்டினை 36 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு சடமாக மீட்டனர்.
பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூராய்விற்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, 36 மணி நேரம் போராடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தடம்புரண்ட ஆவடி மின்சார ரயில் மீட்புப் பணிகள் - கழுகுப் பார்வை காட்சியில்!