மத்திய அரசு தாக்கல் செய்த 2021 பட்ஜெட் குறித்து பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களால் விளக்க உரை ஏற்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட முன்னாள் இந்திய வருவாய் துறை அலுவலர் சரவணக்குமார் இன்று(பிப்.07) பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், ”கரோனா தொற்றால் வருவாய் இழந்த நேரத்தில் பொதுமக்களிடம் அதிகம் வரி வசூல் செய்யாமல், பலனில்லாமல் இருந்த சொத்துகளிலிருந்து எவ்வாறு வருவாய் ஈட்டலாம் என்ற கண்ணோட்டத்துடன், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் இந்த ஆண்டு சீரிய முறையில் தயார் செய்யப்பட்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக வழக்கத்தைவிட உணவு, சுகாதாரத்திற்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும்கூட தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரத்து 500 கி.மீ தூரத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், மீன்வள துறைமுகம், கடல் வள பூங்கா என நான்கு புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது” என்றார்.
தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”உலக சந்தைகளில் போட்டி போடுவதற்கு இங்குள்ள தனியார் நிறுவனங்களின் கட்டமைப்பை தரம் உயர்த்த வேண்டும். அதற்காக அரசு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். சுதேசி, சுயசார்பில் முன்னணியில் இருக்கும் இந்தியாவில் ஆரம்ப காலத்தில் நிலக்கரி, ரயில், விமானம் போன்ற நிறுவனங்களை நடத்த தனியார் யாரும் முன்வரவில்லை.ஆனால் தற்போது தனியார் பலர் தாமாக முன்வந்துள்ளனர்.
அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் யாரும் பாதிப்படையமாட்டார்கள், அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் ஏற்படாது. தனியாருக்கு லாபம் கிடைத்தால் அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். அரசின் சலுகைகளால் இழப்பு ஏற்படும் நிறுவனங்கள்தான் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இல்லையென்றால் அரசுக்கு இழப்பு அதிகரித்து நிதிச்சுமையை சமாளிக்க பொதுமக்களிடம் வரியாக வசூல் செய்ய வேண்டிய நிலை உருவாகும். எனவேதான் குறிப்பிட்ட நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளது” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க:
கர்நாடகா எல்லையில் சசிகலாவை வரவேற்க வைக்கப்பட்ட பேனர் அகற்றம்