நீலகிரி: குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆபத்தான நிலச்சரிவுகள் ஏற்படும் இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பு கருதி பள்ளிகள் மற்றும் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் எல்லநள்ளி அருகே உள்ள மைனலா பகுதியில் வசிக்கும் 36 குடும்பங்கள் நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் வசிப்பதால் அவர்களின் பாதுகாப்பு கருதி எல்லநள்ளி அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
கடந்த மூன்று தினங்களாக தங்கியுள்ள மக்களுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதுகுறித்து முகாமில் தங்கியுள்ள கிராம மக்கள் கூறுகையில், "கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மழை காலங்களில் எங்களை முகாமில் தங்க வைத்து செல்கின்றனர்.
ஆனால் எங்களுக்கு இதுநாள் வரை மாற்று வீடுகள் வழங்கப்படவில்லை. அரசு அலுவலர்கள் மழைக்காலத்தில் மட்டுமே வந்து சந்தித்திவிட்டு சென்று விடுகின்றனர். மழை காலங்களில் கைக்குழந்தையுடன் முகாமில் தங்கியிருப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்கியது போல தங்களுக்கும் மாற்று வீடுகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: Vellore House Collapse: வீடு இடிந்து 9 பேர் உயிரிழந்த பரிதாபம்