கோவை மாவட்டம் சின்னதடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை விநாயகன், மயக்க ஊசி செலுத்தப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் பிடிக்கபட்டது. பின்னர் அந்த யானை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு வரபட்டு அதன் கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் நவீன கண்காணிப்பு கருவி பொருத்தி பின்னர் வனப்பகுதியில் விடபட்டது. முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாடு வனப்பகுதியில் சுற்றி திரிந்த அந்த யானை பொதுமக்கள் வாழும் பகுதிக்கு வராமல் தடுக்கும் விதமாக வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு கருவியிலிருந்து வரும் சிக்னல் மூலமாக காட்டுயானையைக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வனத்துறை ஊழியர்கள் அந்த யானையை கண்காணிக்காமல் இருந்துள்ளனர். யானை தற்போது முதுமலை புலிகள் காப்பக்கத்திற்குள் அமைந்துள்ள நாகம்பள்ளி, மண்டகரை, முதுகுழி ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களை காட்டுயானை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், அதன் கழுத்தில் பொருத்தபட்டிருந்த ரேடியோ காலர் கருவி மாயமாகி உள்ளது . விநாயகன் யானையின் கழுத்தில் இருந்த ரேடியோ காலர் கருவி எப்படி மாயமானது என்பது தெரியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். இதனிடையே சுமார் 2 லட்சம் மதிப்பிலான அந்த கருவி மாயமான சம்பவம் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.