சென்னை: சிட்லபாக்கத்தில் பட்ட பகலில் இருவரை வழிமறித்து போலீஸ் எனக்கூறி ஒரு கும்பல் ரூ. 70 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிட்லம்பாக்கம் போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
விசாரணையில், 'சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம், ஹெரிடேஜ் ஜெயேந்திர நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுஹேல் அகமது (29). இவர் சென்னை பாரிமுனையில் உள்ள பர்மா பஜாரில் செல்ஃபோன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தாம்பரத்தில் உள்ள வங்கியில் அவரது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.70 லட்சம் பணத்தை கடனாக பெற்று வந்துள்ளார். தொடர்ந்து, பணத்தை அவரது கடையில் வேலை செய்யும் ஆகாஷ், பிரவீன் ஆகியோரிடம் கொடுத்து, அவரது வீட்டில் ஒப்படைக்குமாறு கொடுத்து அனுப்பியுள்ளார்.
அதன்படி, இரண்டு பேரும் நேற்று (பிப்ரவரி 15) மாலை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து, ரயில் மூலம் குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். பின்னர், அங்கிருந்து குரோம்பேட்டை ராதா நகர், வீரபத்திரன் தெரு வழியாக ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளனர். அப்போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து, சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசார் எனக்கூறி, அந்த இரண்டு பேர் கொண்டு வந்த பையை சோதனைச் செய்துள்ளனர்.

இதில், கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக்கண்டு உங்களை விசாரிக்க வேண்டும் எனக் கூறி, ராதா நகர் பகுதியில் உள்ள கொல்லஞ்சாவடி அருகே அழைத்துச்சென்று, அங்கிருந்து காரில் அழைத்துச் சென்றுள்ளனர். இதில், ஆகாஷ் என்பவரை மேடவாக்கம் சிக்னல் அருகே இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர், பிரவீனோடு சோழிங்கநகர் பகுதியில் சுற்றி விட்டு, மீண்டும் ராதாநகர் அருகே இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து ஆகாஷ் சுஹேல் அகமதுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த சுஹேல் அகமது சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மணப்பாறை பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (33), திருச்சியை சேர்ந்த ராம்குமார் (40), மணிகண்டன் (37), பெரம்பலூரைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் (37), அருண்குமார் ஆகிய ஐந்து பேரை திருச்சி அருகே கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து, அவர்களை சிட்லபாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கார் ஓட்டுநராக பணியாற்றும்போது அனைவரும் நண்பர்களாக பழகியுள்ளதும், எளிதில் பணக்காரர்கள் ஆவதற்கு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இதனையடுத்து, கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு கார்கள் மற்றும் ரூ.19 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, ஸ்டாலின், ராம்குமார், மணிகண்டன், ராஜேந்திரகுமார் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
ரூ.70 லட்சம் கொள்ளை போன நிலையில், ரூ.19 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகைகளை பறிமுதல் செய்ய அருண்குமார் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு உடந்தையாக மேலும் ஒரு சில நபர்கள் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.