நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை குன்னூர் குப்பைக் கிடங்கில், மக்கும் மக்காத, குப்பை என்று தரம் பிரித்து வைக்கின்றனர். இந்நிலையில் அதிக நெகிழிகளைப் பிரித்து வைத்த பகுதியில் கடந்த மூன்று நாட்களாகத் தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனால் சுற்றியுள்ள பகுதிகளான வசம் பள்ளம் வள்ளுவர் நகர் வாசுகி நகர் போன்ற பகுதிகளில் நச்சுப்புகை சூழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சுவாசக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனை சென்று வருகின்றனர். இதே போன்று இந்தப் பகுதியில் உள்ள குடி நீரும் மாசுபடுவதால் சரும நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து நகராட்சி தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது தண்ணீர் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், மூலம் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.