சத்தியமங்கலம் வனப்பகுதியில் செப்டம்பர் மாதம் பிறந்து பத்து நாள்களே ஆன பெண் யானைக்கன்றை அதன் தாய் யானை விட்டுச் சென்றதால், தாயைப் பிரிந்த துக்கத்தில் சுற்றித் திரிந்துள்ளது. இதனையடுத்து அந்த யானைக்கன்றை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத் துறையினர் கடந்த பத்து நாள்களாகத் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர். ஆனால் அந்த முயற்சி ஏதும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், அந்த யானைக்கன்றுக்கு வனத் துறையினர் 'அம்மு' எனப் பெயர் சூட்டியுள்ளனர். தற்போது, இந்த அம்மு யானை சத்தியமங்கலத்திலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் வளரும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. அம்முவை பராமரிக்க பழங்குடியின பாகன் ஒருவரை வனத் துறையினர் நியமித்துள்ளனர்.
பிறந்து பத்தே நாள்களில் தாயை பிரிந்த யானைக்கன்று தன்னை அன்புடன் பாதுகாக்கும் பாகனுடன் உற்சாகமாக விளையாடி மகிழ்கிறது. பாகன் வழங்கும் உணவுகளைச் சாப்பிட்டு பாசமழையை பொழிந்துவருகிறது. யானைக்கன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஷெர்லாக், பால் வழங்கப்பட்டு, மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை ஜீரணத்திற்காக போனிசம் மருந்தும் வழங்கப்படுகிறது.
தற்போது, முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைக்கன்று அம்முவுடன் சேர்த்து 26 வளர்ப்பு யானைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.