மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர், பந்தலூர் தாலுகாவில் அண்மைக்காலமாக மனித - விலங்கு மோதல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் 50க்கும் மேற்பட்டோர் காட்டு யானை தாக்கி இறந்துள்ளனர். மேலும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை நாசம் செய்வதோடு குடியிருப்பு வீடுகளை சேதபடுத்தி வருகிறது. இதனால் வனத்துறையினர், பொதுமக்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பல்வேறு போராட்டங்கள் வனத்துறைக்கு எதிராக நடைபெற்று வந்தது.
குறிப்பாக மனித - விலங்கு மோதல் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபெறுவதால் யானைகள் தாக்கி தோட்டத் தொழிலாளர்கள் உயிர் இழப்பு அதிகளவில் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க வனத்துறையினர் கூடலூர் , பந்தலூர் தாலுகாவில் முதல் கட்டமாக யானைகள் கிராமப் பகுதிக்குள் நடமாடும் 30 இடங்களை கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் அதிநவீன கேமரா யானைகள் வருகையை பதிவு செய்வதுடன், யானை வந்துள்ள பகுதி குறித்து மாவட்ட வன அலுவலர், வனசரகர்கள், யானை விரட்டும் குழுவினர் வரை குறுஞ்செய்தி சென்றடையும்.
மேலும் அத்துடன் யானை அந்தக் கருவியை கடந்து செல்லும்போது ஒலி எழுப்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒலி குறைந்தது 10 நிமிடம் சத்தம் எழுப்பும். அப்போது அப்பகுதி மக்கள் யானை வருவதை உணர்ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்குள் குறுஞ்செய்தியை கண்ட வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளை விரட்ட புதிய முயற்சி இந்தியாவிலேயே முதல்முறையாக கூடலூர் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்ட கருவியை காட்டு யானை கடக்கும் போது ஒலி எழுப்பி யானை மிரண்டு ஓடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. வனத்துறையினரின் இந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது.
இதையும் படிங்க: உணவகங்கள், மருத்துவமனைகளில் கரோனா பராமரிப்பு மையங்கள் அமைக்கலாம்!