நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை சீசன் என்பதால் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் கண்டு ரசிக்கும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் பிரசித்திபெற்ற மலர்க் கண்காட்சி நடத்தப்படும்.
சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக இது அமையும். இந்த மலர்க் கண்காட்சி கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், கடந்த 5 மாதங்களாக மலர்க் கண்காட்சி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. குறிப்பாக 25 ஆயிரம் மலர்ச்செடிகள் தொட்டிகளில் அமைக்கப்பட்டன.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் மீண்டும் மலர்க் கண்காட்சி ரத்தாகி உள்ளது. இதனால் பூங்காவில் பூத்துக் குலுங்கும் லட்சக்கணக்கான மலர்களை காணப் பார்வையாளர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 25 ஆயிரம் மலர்த் தொட்டிகளைக் கொண்டு கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வு வாசகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தயவு செய்து ஊசி போட்டுக்கோங்க...': நடிகை நயன்தாரா