உயிர் சூழல் மண்டலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது, மேற்குத் தொடர்ச்சி மலை. இமயமலையை விட பழமையான இந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் வனவிலங்கு சரணாலயம், தேசியப் பூங்கா மற்றும் காப்புக் காடுகள், சோலை மரக்காடுகள் உள்ளன. இங்கு அரிய வகை விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் தாவரங்கள் அதிகளவில் உள்ளன.
கடந்த பல ஆண்டுகளாகவே மேற்குத் தொடர்ச்சி மலை, அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்த மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகப்படியாக ஆக்கிரமிப்புகள், கட்டடங்கள், விவசாயங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலை அழகில்லாத காட்சிகளுடன் அழிவை நோக்கிச் செல்வது வேதனையடையச் செய்கிறது. சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க, ஓசை என்னும் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குன்னூரைச் சேர்ந்த பள்ளி மாணவி காவியா (17) உட்பட 26 பேர் உள்ளனர். இது குறித்து காவியா கூறியதாவது, "மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சார்ந்த 26 பேர் கொண்ட குழு மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
குறிப்பாக மாதவ் காட்கில் என்பவரின் தலைமையில் மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அரசுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க செய்ய வேண்டிய வழிமுறைகளை வெளியீட்டு, இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது. ஆனால், இதன் வழிமுறைகளைப் பின்பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு ஆணைப் பிறப்பித்து, மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இயற்கையைப் பாதுகாக்க பள்ளி மாணவி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது வன ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கரோனா நிதி குறித்து வெளிப்படையாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!