நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இங்கு சராசரியாக 500-க்கும் மேற்பட்ட வெளிப்புற நேயாளிகளும், 300-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு குன்னூர் பகுதியைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் அருள் என்பவர் தனது மனைவி மஞ்சுவை பிரசவத்திற்காக உதகை தலைமை மருத்துவமனையில் சேர்த்தார்.
இந்நிலையில், மஞ்சுவுக்கு பிப்ரவரி 18ஆம் தேதி மாலை பிரசவ வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர், நான்கு மணி நேரத்திற்குப் பிறகு சுகப் பிரசவத்திற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (பிப். 19) காலை வலி அதிகமாகவே உடனடியாக அவர் ஆபரேஷன் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் செவிலியர் அருளிடம் குழந்தை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறியதால் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு பிறந்த குழந்தை சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அருளிடம் தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவர்கள், செவிலியரின் கவனக்குறைவே குழந்தை இறப்புக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டினார். இரவுப் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை குழந்தையின் உடலை வாங்க மறுப்புத் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
பின்பு அங்கு வந்த உதகை ஜி1 காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி முதல்வர் மீது மாணவர்கள் தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி!