தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மேப்பத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் பாரம்பரிய உணவுகளை பறைசாற்றும் வகையில் 'பூர்வகுடி உணவு திருவிழா' நடத்தப்பட்டது. அதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக கள ஆய்வு விடுதியின் சார்பாக செய்யப்பட்டுள்ளது. சோழநாடு, கொங்கு நாடு, பாண்டிய நாடு, நடு நாடு மற்றும் தொண்டை நாடு ஆகிய ஐந்து மண்டலங்களின் உணவு வகைகள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இத்திருவிழா செப்.22 ஆம் தேதி முதல் அக்.9 ஆம் தேதி வரை தொடர்ந்து 18 நாட்களுக்கு நடைபெறுகிறது. நாள்தோறும் 45 விதமான சைவ, அசைவ உணவுகள் கிரைண்டர், மிக்சி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவை இல்லாமல் இயற்கை வேளாண்மை மூலம் விளைவித்த காய்கறிகள் மூலம் செய்யப்படுகின்றன. இரவு 07.30 மணி முதல் 09.30 மணி வரை வழங்கப்படுகிறது. இதில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு ருசியான உணவு வகைகளை உண்டு பாராட்டி வருகின்றனர்.
இந்த உணவு திருவிழாவின் ஒருபகுதியாக நேற்று (செப்.25) நடந்த அரச விருந்தில், பால் கொழுக்கட்டை, தவள அடை, முருங்கைக்கீரை பருப்பு அடை, மதுரை கருப்பட்டி அப்பம், விருதுநகர் பொரிச்ச பரோட்டா, சைதை செட் தோசை, புடலை சாலட், சாமை தயிர் சாதம், நாட்டு காய்கறிகள் சாலட், பழக்கலவை, நவதானிய சுண்டல், ரோஸ்மில்க், பன்னீர் சோடா, விதவிதமான குருமா வகைகள், நாட்டுக்கோழி குழம்பு, நாட்டு மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: உசிலம்பட்டியில் காத்ரினா கைப்... அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம்...