தஞ்சாவூர்: பொது நூலகத்துறை சார்பில் நடைபெறும் காவிரி இலக்கியத் திருவிழாவினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (மார்ச் 18) தஞ்சாவூரில் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், "காவிரி படுகை என்பது வேளாண் துறையை மட்டும் வளர்த்த படுகையாக இல்லாமல், எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும் வளர்த்தெடுத்த ஒரு பகுதியாக உள்ளது. கோவலனும், கண்ணகியும் இதே காவிரி படுகையில் இருந்து தான் மதுரைக்கு சென்றனர் என்று சொல்லும் போது துறையின் அமைச்சராக இருக்கக்கூடிய நான் இந்த இலக்கியத்திற்கான விழாவினை நடத்துகிறேன்.
அடுத்த வாரம் தஞ்சையில் தொடங்கி மதுரைக்கு நானும் அதே பாதையில் செல்லவிருக்கிறேன். பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு நாம் வரவில்லை. நேரம் போகவில்லையே என்று எழுதுகின்ற எழுத்தாளர்கள் மத்தியில் நம்முடைய மக்களின் வாழ்வாதாரத்தை எண்ணி நேரம் போதவில்லையே என்று எழுதக் கூடியவர்கள் நம்முடைய எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் தான்.
எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் ஒரு இனத்தின் பாதுகாப்பு கேடயமாக இருக்கிறார் என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வாழ்க்கையில் ஒரு முறையாவது கீழடி அருங்காட்சியகத்தை மாணவர்கள் பார்வையிட வேண்டும் எனத் தெரிவித்தார். தமிழ் மொழியின் செழுமையினையும், நமது மரபு, பண்பாடு, கலை மற்றும் வரலாற்றினை போற்றிடவும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலக்கிய திருவிழா இரண்டு நாட்கள் (மார்ச் 18,19) நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் பெருமைமிகு சிறப்புமிகு நதிகளில் என்றும் இளமையும் வளமையும் கொண்ட பொன்னி என்று சிறப்பு பெற்ற காவிரி நதியினை போற்றிடும் வகையில் காவிரி நதிக்கரை மக்களின் பண்பாட்டினை நினைவு கூறும் வகையில், அது சார்ந்த இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது.
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் சங்கீத மஹால் என இரண்டு அரங்குகளில் விழா நடைபெறுகிறது. இவ்விழாவானது இலக்கியங்களை படைப்பு மற்றும் பண்பாட்டினை மையப்படுத்தி படைப்பு அரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம் என இரண்டு அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் 45-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் 30-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். இந்த திருவிழாவினை பற்றிய விழிப்புணர்வை கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் வாசிப்பு சார்ந்த பேச்சு, போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி நாட்டுப்புறப் பாடல்கள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பொது நூலக இயக்குநர் இளம்பகவத் ஆகியோர் வழங்கினார்கள். இதுகுறித்து கவிஞர் சல்மா என்பவர் கூறும் போது, இது போன்ற இலக்கிய திருவிழாக்களில் பிற மாநில எழுத்தாளர்களையும் அழைத்து உரையாற்ற வேண்டும். அப்போது தான் அவர்கள் மாநில இலக்கியங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். இவ்விழாவில் எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, எழுத்தாளர்கள் பூரணச்சந்திரன், ஜெயராமன், கவிஞர்கள் நந்தலாலா, சல்மா உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வு எழுத 75 சதவீதம் வருகை அவசியம் - அன்பில் மகேஷ் விளக்கம்