சேலம்: மாவட்டத்தின் பிரபல தனியார் மருத்துவமனை சார்பில் கல்லீரல், சிறுநீரக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய மருத்துவர் இளங்குமரன் கூறுகையில், "தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சென்னையிலேயே அதிக அளவில் நடைபெற்றுவந்தது.
தற்போது அந்த வசதி சேலத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அளவில், ஆண்டுக்கு 25 ஆயிரம் பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களில் 500 பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை நடக்கிறது.
உடல் உறுப்பு தானம் செய்கிறவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் குறைவு. உடல் உறுப்பு தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்.
இந்த ஊரடங்கு காலத்தில் நிறைய பேருக்கு கல்லீரலில் கொழுப்பு அதிகரித்து கல்லீரல் நோய் ஏற்பட்டுள்ளது. அதே போல் மதுப்பழக்கத்தாலும் கல்லீரல் நோய்கள் அதிகரிக்கின்றன.
இந்தக் கல்லீரல் பாதித்த நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது சேலத்திலும் செய்து நோயாளிகளைக் காப்பாற்ற முடியும். அதற்கான மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கணவரின் ஆசிட் வீச்சில் மனைவி உயிரிழப்பு