வெளிநாடுகளில் பணியாற்றச் செல்லுபவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் என்பது ஏராளம். சில சம்பவங்கள் பொதுமக்களுக்கும், அரசாங்கத்திற்கும் தெரியாமலேயே போய்விடுகின்றன. சில சம்பவங்கள் சிரமமான முறையில் மற்றவர்களின் கண்களில் பட்டு பின்பு பிரச்னையில் உள்ளவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். இதுபோன்ற பல இன்னல்களை கடந்து தற்போது திருச்சி இளைஞர் மீட்கப்பட்டுள்ளார்.
மலேசியா கோலாலம்பூர் செந்தூல் ராயாவில் செயல்பட்டுவரும் தனியார் உணவகம் ஒன்றில் திருச்சியைச் சேர்ந்த இளைஞர் சாகிர் உசேன் பணியாற்றிவந்துள்ளார். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஜாகிர் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
சம்பளமே வழங்காமல் அவரை உணவகத்தில் வேலைசெய்ய உணவக உரிமையாளர்கள் துன்புறுத்தியதாகவும் அதனால்தான் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஜாகீர் உசேன் தனக்கு ஏற்பட்ட கொடுமையை வீடியோவாக பதிவிட்டு வாட்ஸ்அப் மூலம் திருச்சியில் உள்ள சகோதரர் சதாமுக்கு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, சதாம் தனது சகோதரன் அனுப்பிய வீடியோவை பதிவை மலேசியாவில் உள்ள மலேசிய உலக மனித நேய அமைப்பின் தலைவர் கமலநாதன் என்பவருக்கு அனுப்பி உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து கமலநாதன் ஜாகீர் உசேனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். இது தொடர்பான செய்தி மலேசிய ஊடகங்களில் மிக வேகமாகப் பரவிவருகிறது.
சேலத்தில் ஜாகீர் உசேனின் சகோதரர் சதாம் நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறியதாவது
"மலேசியாவில் எனது தம்பி ஜாகீர் உசேன் வேலை தேடிச்சென்று அங்கு உள்ள உணவகத்தில் பணியாளராகச் சேர்ந்து வேலை பார்த்துவந்தார். அவருக்குச் சம்பளம் வழங்காமல் உணவக உரிமையாளர்கள், அவரை துன்புறுத்தி வேலைகளை செய்யவைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஜாகிர் உசேன் உடல்நலமும் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உணவகத்தில் பணிசெய்ய முடியாமல் தவித்துள்ளார். ஆனாலும் அவரை உணவக உரிமையாளர்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளனர்.
இதனால் தனக்கு நேர்ந்த நிலையை வாட்ஸ்அப் வீடியோவாகப் பதிவுசெய்து அனுப்பினார். இதனையடுத்து மலேசியாவில் உள்ள எனது நண்பர்கள் மூலம் அங்குள்ள, மலேசிய உலக மனித நேய அமைப்பின் தலைவர் கமலநாதனிடம் உதவி கேட்டு கோரிக்கைவிடுத்தோம். கமலநாதன் எனது தம்பியை மீட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். அதற்காக அவருக்கும், மலேசிய அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
அதே நேரத்தில் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கும் எனது தம்பி மீண்டும் எங்களது வீட்டுக்கு வர வேண்டும். அவரை பத்திரமாக மீட்டு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தாயகத்துக்கு கொண்டுவர உரிய உதவிகளை செய்ய வேண்டும். எங்கள் குடும்பத்தில் அனைவரும் மிகுந்த வேதனையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பனங்கொட்ட தாத்தா தெரியுமா?' - பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞர்!