கரோனா பரவலால் தமிழ்நாட்டில் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் மாத சம்பளம் இன்றி சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களுக்கு கருணை உள்ளத்தோடு மாத சம்பளம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரை நேரில் சந்தித்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் மனு அளித்தனர். இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது, "தமிழ்நாட்டில் உள்ள 113 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஆண்டுக்கு 11 மாதம் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுவருகிறது. அவர்களுக்கு மாதம் ரூ.15,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கரோனா காலம் என்பதால் அந்தச் சம்பளமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் கௌரவ விரிவுரையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வறுமையில் வாடி வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்தனர்.