மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் வன்னியர் சமுதாயத்தை சேர்த்து அந்த மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் என்றும், அடுத்து திமுக ஆட்சி அமைத்தால் வன்னியர் சமூகத்துக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் பேசியிருந்தார்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அருள் சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, திமுக தலைவர் ஸ்டாலின் வன்னியர்களுக்கு திமுகதான் இட ஒதுக்கீடு வழங்கியதாகவும் வன்னியர் சமுதாய தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாகவும் வாக்குறுதி கொடுத்து வருகிறார். வன்னியர்களுக்கு ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் மட்டும்தான், வேறு யாரும் இல்லை.
திமுகவைப் பாராட்டி சேலத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது என்பது அவர்களே செலவு செய்து ஒட்டிக் கொண்டது. வன்னியர்கள் யாரும் ஒட்டவில்லை. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவில் மர்மம் உள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த மன உளைச்சல்தான் அவரது மரணத்துக்கு காரணம். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் பாமக சார்பில் மனு அளிக்க இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
திமுக பாமக தலைவர்களுக்கு இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக வார்த்தைப்போர் நிலவிவரும் நிலையில், பாமக மாநில நிர்வாகியின் ஸ்டாலின் மீதான இந்த குற்றச்சாட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘வன்னியர் சமூகத்தினருக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு’ - ஸ்டாலின் உறுதி