சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை சார்பில், இந்திய குற்றவியல் சங்கத்தின் 6-வது சர்வதேச மற்றும் 45-வது அகில இந்திய குற்றவியல் மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையும், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் சமூகவியல் துறை, கிரெசென்ட் சட்டக் கல்லூரி இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை, முன்னாள் டிஜிபி நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், "மாநில கல்வியை ஒதுக்கி விட்டு இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை புகுத்துகிறது ஒன்றிய அரசு. அதை எதிர்த்துப் போராடும் ஒரே அரசு தமிழ்நாடு அரசு தான். நீதித்துறை, காவல்துறை, சட்டத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு. பெண் காவலர்கள் உருவாக்கி ஐம்பதாவது பொன் விழா கொண்டாடிய மாநிலம் நமது தமிழ்நாடு" என கூறினார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அமைச்சர் பேசும்போது ஆண்மை என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கு ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்கிறார்கள். இங்கு ஆணுக்கு பெண் சமம் என குறிப்பிட விரும்புகின்றேன்" என தனது உரையை தொடங்கினார்.
"மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக சட்டத்திருத்தம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் பெறப்படும் நல்ல கருத்துக்களை செயல்படுத்துவதில் இந்த அரசு முழு மனதுடன் உள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் அதிக அளவில் காவல் துறையில் இருக்கும் இடத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம்" என பேசினார்.