சென்னை: தமிழ்நாட்டில் முதுகலை தொழிற்கல்விப் படிப்புகளில் அண்ணா பல்கலை கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு மூலம் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கும், முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகியவற்றிற்கு நுழைவுத் தேர்வு தனித்தனியாக நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டுக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்விற்கு ஜனவரி 24 ம் தேதி முதல் பிப்ரவரி 21ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 26ந் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்ஆர்க். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான சீட்டா மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத் தேர்விற்கு ஜனவரி 24ந் தேதி முதல் பிப்ரவரி 21 ம் தேதி வரை https://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 26ந் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் இளங்கலை பொறியியல் படிப்பில் இறுதி செமஸ்டர் படித்து தேர்வு எழுதி மதிப்பெண் பட்டியல் இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம். எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 500 ரூபாயும், பிற வகுப்பினருக்கு 1,000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு மார்ச் 22ந் தேதி நடைபெறுகிறது.
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 900 ரூபாயும், இதர பிரிவினருக்கு 1,800 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கு கலந்தாய்வு கட்டணமும் இதில் அடங்கும். இவர்களுக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 23 ந் தேதி நடைபெறுகிறது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் மாணவர்கள் கட்டணங்களை செலுத்த வேண்டும். இதே இணையதள முகவரியில் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: பிற மாநிலங்களுக்கு விளையாட செல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு பிரச்சனை வந்தால் என்ன செய்வது?
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும். பி.இ., பி.டெக். பட்டத்தை தொலைத் தூரக் கல்வி மூலமோ அல்லது வார இறுதி நாட்களில் நடைபெறும் வகுப்பு மூலமோ பயின்றவர்களுக்கு நுழைவுத் தேர்வினை எழுத தகுதியில்லை. மேலும் 10,12ம் வகுப்பு, 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கும் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் படிப்பில் சேர தகுதியில்லை.
நுழைவுத் தேர்வு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், பாகூர் ஆகிய 15 இடங்களில் நடைபெறும். மேலும், விபரங்களை பெறுவதற்கு செயலளார், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு , நுழைவுத்தேர்வு மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை என்ற முகவரியிலோ அல்லது 044-2235 8289 , 044-2235 8314 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறும். கடைசி நேரத்தில் ஏற்படும் தடங்கலை தவிர்க்க முன்னரே விண்ணப்பிக்கவும். மாணவர்களுக்கு தேர்விற்கான வினாத்தாள் https://tancet.annauniv.edu/tancet/#home என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர்வதற்கு தனியாக விண்ணப்பம் அளிக்கப்படும்'' என அதில் கூறப்பட்டு்ளளது.