தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பணி வழங்க பரிந்துரை செய்யக் கோரி 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மனுவுடன் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக குவிந்தனர். எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் மொத்த மதிப்பெண் அடிப்படையில் பின்னடைவை சந்தித்த எங்களுக்கு வயது வரம்பு காரணமாக அடுத்த ஆண்டு தகுதி தேர்வில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்த 2020 -21ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட வேண்டிய 10 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். கரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டு காவலர் தேர்வு நடைபெறுமா என்ற சூழ்நிலை நிலவுகிறது.
எனவே, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு, எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் தோல்வியடைந்த எங்களுக்கு இந்த முறை காவலராக தேர்வு செய்யப்பட்டு காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிக்கு அனுப்பப்பட்டால் நாங்கள் பயிற்சி பெறும் ஆறு மாத காலமும் எங்களுக்கு எந்தவித சம்பளம் வழங்க வேண்டாம்.
தற்போதைய சூழ்நிலையில் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அரசாங்கத்தின் நிதி நெருக்கடி சரியான பிறகு எங்களுக்கு சம்பளம் வழங்கினால் போதுமானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.