சேலம்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில குழு கூட்டம் சேலத்தில் நேற்று(நவ.30) நடைபெற்றது. அகில இந்திய தலைவர் ரஹீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் ரெஜிஸ்குமார், மாநில செயலாளர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஹீம், "தமிழ்நாட்டில் நீட் தேர்வை தமிழில் நடத்துவது போன்று, மத்திய அரசின் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டி தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், புதிய குழு அமைத்து வேலை வாய்ப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஆணவப்படுகொலை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வர வலியுறுத்தி, டிசம்பர் 16 அன்று அனைத்து மாவட்டத்திலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மத்திய பாஜக அரசு மதரீதியாக மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிசம்பர் 6ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமம், நகரங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படும்.
கரோனாவைத் தொடர்ந்து கனமழையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநில அரசு கோரியுள்ள நிதியை முழுவதுமாக மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்