நாடு முழுவதும் கேவிட்-19 கரோனோ வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் மருத்துவமனைகள் முழுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில் சேலத்தில் தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மருத்துவர் செல்வரங்கம் கூறுகையில், "அண்மையில் சேலம் மண் கண் மருத்துவர்கள் சங்க உறுப்பினர்கள் இணையவழி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்க விரும்புகிறோம். இன்றுமுதல் தனியார் கிளினிக், மருத்துவமனைகளில் அவசர கண் நோய்களுக்கு மட்டுமே உடனடியாகச் சிகிச்சை அளிக்க இயலும்.
காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணிவரையும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். பிற நேரங்களில் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.
கண்ணில் அடிபடுதல், கண் சிவப்பு வீக்கம், நீர்வடிதல் ஆகிய அனைத்திற்கும் அவசர சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும். மருத்துவமனைக்குள் நோயாளியுடன் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சளி காய்ச்சல், இருமல் இருந்தால் அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவர்" என்று தெரிவித்தார்.
மேலும், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள தனியார் கிளினிக், மருத்துவமனைகள் இதேபோன்று செயல்படும் என்று செல்வரங்கம் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இத்தாலியில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு - ஆனாலும் ஒரு நற்செய்தி!