சேலம் கோட்டை அருகில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் நூற்றுக்கணக்கானோர் 14ஆவது நாளாக இன்றும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் முத்தரசன், திருமுருகன் காந்தி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-slm-01-caa-mutharasan-vis-script-7204525_01032020142925_0103f_00904_627.jpg)
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் நேரில் ஆதரவு தெரிவித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிராகத் தற்போதைய ஆட்சி நடைபெறுகிறது. நீதிமன்றங்கள் கேலிக்கூத்தாக மாறிவிட்டது. அமித் ஷா கொலைக் குற்றவாளி என்று கூறிய விவகாரத்தில் நீதிபதி காணாமல் போயுள்ளார். அந்த வழக்கைப் பதிவுசெய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதி மாற்றம் செய்யப்படுகிறார்.
குஜராத் கலவரத்தை ஏற்படுத்தியது போல நாடு முழுவதும் கலவரத்தை உருவாக்க பாஜக முயல்கிறது. டெல்லியைப் போன்று தமிழ்நாட்டிலும் கலவரம் வெடிக்கும் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ள ஹெச். ராஜா மீது காவல் துறை எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தந்தை பெரியார் வழிவந்த தமிழ்நாடு அரசு தற்போது அஞ்சி நடுங்குகிறது.
ரஜினிகாந்தை பொறுத்தவரையில் அவர் எதிலுமே நம்பிக்கையில்லாதவர். அவரைப் பற்றி மட்டும்தான் அவர் நம்பிக் கொண்டிருக்கிறார். வருடத்திற்கு ஒருமுறை வரும் படத்திற்கு விளம்பரம் செய்யவே அரசியல் பேசி வருகிறார்" என மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.
இதையும் படிங்க: ரோஜா வனம் நிகழ்வின் மூலம் குஷ்பூ மூவருக்கு “சவால்“ விடுத்துள்ளார்!