சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த திமுக, பாமக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வாழ்த்துகள் கூறினார். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ''ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்து பேசி இருக்கிறார். ஓபிஎஸ், டிடிவி தினகரனை துரோகி என்று குறிப்பிட்டு இருந்தார். டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை துரோகி என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்போது இரண்டு துரோகிகளும் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். பண்ருட்டி இராமச்சந்திரன் பேட்டி கொடுத்திருக்கிறார். அவர் எம்ஜிஆர் இருக்கும்போதே பாஸ்கர் ராவ் என்ற பட்டம் பெற்றவர்.
அம்மா இருக்கும்போதே அதிமுகவிலிருந்து அவர் பிரிந்துசென்றவர். அம்மா அவர்களுக்கு விசுவாசம் இல்லாதவர். பிறகு பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தார். அங்கும் விசுவாசமாக அவர் இல்லை. பின்னர் தேமுதிகவிற்கு சென்றார். அங்கும் விசுவாசமாக இல்லை. இப்போது பண்ருட்டியார் பேட்டி அளிப்பது விந்தையாக இருக்கிறது. அவர் எங்கு சென்றாலும் அந்த கட்சியை முடித்துவிடுவார். இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது. இன்று நிழல் கூட அவரிடம் வரவில்லை. கிளைச்செயலாளர் ஆகக்கூட இருக்கத் தகுதி பண்ருட்டியாருக்கு கிடையாது.
கட்சிக்கு உழைக்கும் கிளைச்செயலாளர் தகுதி கூட அவருக்கு இல்லை. நேற்றைய பண்ருட்டியார் பேட்டியின் போது கூட்டத்தில் வைத்திலிங்கத்தை காணவில்லை, மனோஜ் பாண்டியனை காணவில்லை, ஜேசிடி பிரபாகரனை காணவில்லை. இப்போதே மூன்று பேரை காணவில்லை. கிரிக்கெட் மேட்ச் பார்க்கச் சென்ற ஓபிஎஸ்,
ஸ்டாலின் மருமகனை சந்தித்து உள்ளார். இருவரும் பேசிய செய்தி பத்திரிகையில் வந்திருக்கிறது.
இதன் மூலம் நாட்டு மக்கள் ஓபிஎஸ் பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஆர்.எஸ். பாரதி என் மீது பொய்யான வழக்கை போட்டார். டெண்டர் ஊழல் என்றார். உச்ச நீதி மன்றம் சென்றோம். உண்மையான வழக்கு ஏதும் போடவில்லை. அவர்களது ஊழலை மறைக்க எங்கள் மீது வழக்குகளைப் போடுகிறார்கள்.
அதிமுக ஆட்சி சிறப்பான ஆட்சி என நிரூபித்து இருக்கிறோம். ஊழல் நடந்துள்ளதால் அமைச்சரவையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஒரே ஒரு ஆடியோவால் அரசு ஆடிப் போய் உள்ளது. திமுக ஆட்சி இரண்டு ஆண்டு முடிந்திருக்கிறது. எல்லாத் துறைகளும் ஊழல் நடந்துள்ளது. இதற்குச் சான்று தான் முன்னாள் நிதி அமைச்சர் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார்.
இன்னும் நிறைய ஆடியோ வரும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இரண்டு ஆண்டில் இவர்கள் செய்த சாதனை 30 ஆயிரம் கோடி ரூபாய் தான். நிதி அமைச்சரை அச்சத்தின் அடிப்படையில் நீக்காமல் இருக்கலாம். ஆளுநரை நாங்கள் சந்திக்கும்போது, இது பற்றி விளக்கமாகத் தெரிவிப்போம். மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போது அவரிடம் தெரிவித்து இருக்கிறோம்.
நிதி அமைச்சராக இருந்தவர் தெரிவித்த கருத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆவினில் நிறைய முறைகேடுகள் நடந்திருக்கின்றன. அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்கிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என ஏற்கெனவே தெரிவித்திருக்கிறோம். இப்போது நாங்கள் சொல்வதெல்லாம் உண்மை எனக் கருதி அமைச்சரை மாற்றி இருக்கிறார்கள்.
அரசியல் ரீதியாக என்னை ஏதும் செய்ய முடியவில்லை. இதனால் மிலானி என்பவர், திமுக கட்சியைச் சேர்ந்தவர் அவர்தான் இப்போது என் மீது வழக்குத் தொடர்ந்து இருக்கிறார். அதை சட்டப்படி சந்திப்போம். அதில் அக்கவுன்ட் தவறு எனத் தெரிவித்திருக்கிறார். இருக்கும் அக்கவுன்ட் அவ்வளவுதான். நான் எந்த தொழிலும் செய்யவில்லை. விவசாயம் மட்டும் தான் செய்கிறேன்.
முழுக்க முழுக்க இது விதிமீறல் ஆகும். எடப்பாடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், சேலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்களை ஆளுநர் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார். அதனால் அவர் மீது திமுகவினருக்கு கோபம் வருகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெளிவாக இது பற்றி தெரிவித்திருக்கிறார்.
கழகத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தொண்டர்கள் என்ன கருதுகிறார்களோ அதைத் தான் கட்சி செய்யும். நிறைய பேர் கட்சியில் இணைந்து வருகிறார்கள். இவர்களை வரவேற்கிறோம். அதிமுக என்பது எங்கள் தரப்பிற்கு வந்துவிட்டது. ஓபிஎஸ் எங்கு வேண்டுமானாலும் மாநாடு போடட்டும்.
தேர்தல் ஆணையத்தின் மூலம் எங்களுக்கு கட்சி வந்திருக்கிறது. நீதிமன்றம் மூலம் எங்களுக்கு கட்சி வந்திருக்கிறது" இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: நிர்வாக சேவைகளில் ஆளுநரைவிட முதலமைச்சருக்கே அதிகாரம் அதிகம் - உச்ச நீதிமன்றம் அதிரடி!