சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, அவரது இல்லத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், “மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி @ikamalhaasan சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்,” என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாடு அரசியல் வட்டாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் வியூகங்களை இப்போதிலிருந்தே கட்சிகள் வகுக்கத் தொடங்கிவிட்டன. இந்த பரபரப்பான சூழலில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை, அவரது வீட்டிற்கே சென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் எக்ஸ் பதிவை பகிர்ந்து கருத்து தெரிவித்திருக்கும் கமல்ஹாசன், “நெடுநாள் நீடிக்கப் போகும் இனிய நினைவாக இந்தச் சந்திப்பு அமைந்தது. அன்புத் தம்பியும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அன்பிற்கும் பண்பிற்கும் என் நன்றி,” என்று பதிவிட்டுள்ளார்.
சேகர்பாபு சந்திப்பு:
நேற்றைய தினம் (பிப்ரவரி 12) அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கமல்ஹாசனை சந்தித்து பேசியது நினைவுக்கூரத்தக்கது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினார். தலைவரின் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, கட்சியின் பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்கள் உடன் இருந்தார்,” என்று கூறப்பட்டிருந்தது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. @PKSekarbabu அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினார்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) February 12, 2025
தலைவரின் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, கட்சியின் பொதுச்செயலாளர் திரு. @Arunachalam_Adv அவர்கள்… pic.twitter.com/ni4Ne3hqFb
மக்கள் நீதி மய்யம்
பிப்ரவரி 21, 2018 அன்று ‘மக்கள் நீதி மய்யம்’ (ம.நீ.ம) கட்சியை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப் பேரவைத் தேர்தல்களில் அந்த கட்சி தனித்துப் போட்டியிட்டது. கோயம்புத்தூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார்.
இந்த சூழலில், மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறினர். இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் அதாவது மார்ச் 9 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார் கமல்ஹாசன்.
![உதயநிதி ஸ்டாலின் (இடது), கமல்ஹாசன் (வலது)](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-02-2025/23534447_uday-met-kamal-in-home.jpg)
இதையும் படிங்க: 'பிரசாந்த் கிஷோர் ஒரு வியூக வகுப்பாளர்'... தொண்டர்களை நம்பித்தான் திமுக தேர்தலை சந்திக்கிறது - கனிமொழி! |
சந்திப்பின் முடிவில், தி.மு.க - ம.நீ.ம இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி மக்களவைத் தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்வார் என்றும், அவருக்கு எதிர்காலத்தில் காலியாகும் மாநிலங்களை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவர்கள், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவர் கமல்ஹாசனைத் தொடர்ந்து சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.