ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம். வேலுவின் திருவுருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் பட்சத்தில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். கட்சியின் பலத்தை பொறுத்து இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். கூட்டணியில் தேசிய கூட்டணி எனில் அதன் தலைமையும், மாநில கட்சி எனில் அதன் தலைமையும் வெளியிடும் வேட்பாளர் சார்ந்த அறிவிப்பே உறுதியாக இருக்கும்.
இந்திய அளவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சட்டங்களை பலப்படுத்தி குற்றம் புரிந்தவருக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கிலிட வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக திமுகவினர் அரசியல் செய்து வருகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதன் பிரதிபலிப்பு தெரியவரும்.
கரோனா காலத்தில் தமிழ்நாடு அரசு மிகச்சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் தமிழ்நாட்டில் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர்'' என்றார்.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு கரோனா: அதிர்ச்சியில் மரணமடைந்த ரசிகர்!