தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட கடல்பரப்பைக் கொண்டுள்ள மாவட்டம் ராமநாதபுரம். இதன் மொத்த நீளம் 271 கிலோ மீட்டர். இங்கே மீன்பிடித் தொழில் முதன்மைத் தொழிலாக உள்ளது. ஓராண்டிற்கு 1.48 கோடி டன் மீன்கள் இங்கே பிடிபடுகின்றன. மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தப்படியாக இங்கே விவசாயத்தில் பெரும்பான்மை மக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
ராமநாதபுரத்தில் 1,24,445 ஹெக்டேர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்டம் 100% வறட்சியையே சந்தித்தது. ராமநாதபுரத்தில் சராசரி மழையின் அளவு 827 மி.மீ. ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டு 384.93 மி.மீ, 2017இல் 599.94 மிமீ, 2018இல் 663.67 மழை மட்டுமே இங்கே பதிவானது. மேலும் பயிர் காப்பீடுத் தொகையை நம்பியே வாழ்க்கையை நகர்த்தி வந்த பல விவசாயிகளும், நெல் விவசாயத்தைக் கைவிட்டு சிறு தானியங்களைப் பயிரிடத் தொடங்கினர்.
இந்நிலையில் தமிழ்நாடு மீன்வளத்துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் சார்பாக விவசாயிகளுக்கு குட்டை, குளங்களில் கடல் மீன் வளர்ப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் மீன்வளப் பல்கலைக்கழகப் பேராசிரியர், மத்தியக் கடல் மீன் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு நன்னீரில் கடல்மீன்கள் வளர்ப்பது குறித்து விளக்கினர். பின் விவசாயிகளை, நேரடியாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் சென்றும் காண்பித்தனர்.
தமிழ்நாடு மீன்வளத்துறையின் இந்தப் பயிற்சிமுகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக விவசாயிகள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.