ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் இலங்கைக்கு கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்டவை கடத்துவது அதிகரித்துவருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்று (ஜூலை 22) நள்ளிரவு பிரப்பன்வலசை கடற்கரையில் மண்டபம் சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினரைக் கண்டதும் சிலர் கடல் அட்டைகளை அங்குப் பதுக்கிவைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து சுமார் 35 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் பறிமுதல்செய்யப்பட்டன. மேலும் பிரப்பன்வலசை கடற்கரையில் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்திலிருந்து சுமார் 25 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் பறிமுதல்செய்யப்பட்டன.
இந்நிலையில் பறிமுதல்செய்யப்பட்ட 60 கிலோ கடல் அட்டைகள் ராமேஸ்வரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் கடலில் விடப்பட்டன. தற்போது, இதில் தொடர்புடையவர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: அனுமதி இல்லாமல் ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணி - அரசு பதிலளிக்க உத்தரவு!