இந்தியா, இலங்கை ஆகிய இரு நாட்டு மக்களும் உண்ணும் கலாசார உணவு வகையான கருவாடுகளை இந்தியாவிலிருந்து, இலங்கைக்கு அனுப்பி வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று (பிப்.14) தமிழ்நாடு ஏஐடியு மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில், கருவாடுகளை கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் உள்ள அனைத்து கடலோர மாநிலத்திலிருந்தும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களில் சுமார் 17 விழுக்காடு மீன்கள் பதப்படுத்தப்பட்டு, உயர் ரக கருவாடாக பல்வேறு முன்னணி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
அண்டைநாடான இலங்கைக்கு இந்தியாவிலிருந்து மீன்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட மாசி கருவாடு, கட்டா கருவாடு, தள பாத்துக்கருவாடு, நெத்திலி கருவாடு உட்பட பல மீன் மற்றும் கருவாடு வகைகள் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது இலங்கை அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
இதனால் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கருவாடுகள் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் தேக்கம் அடைந்துள்ளன. கடந்த நவம்பர் 2020ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் இருந்து மீன் மற்றும் கருவாடு வகைகள் இறக்குமதி செய்வதை இலங்கை தடை செய்துள்ளது. கருவாடுகளுக்கு மூன்று மடங்கு வரியும் விதித்துள்ளது.
ஏற்கெனவே ஒரு கிலோ கருவாடுக்கு 100 ரூபாயாக இருந்த வரியை, தற்போது 300 ரூபாயாக உயர்த்தி இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் அதாவது மாலத்தீவு மற்றும் பாகிஸ்தானில் உள்ள கராச்சி போன்ற பகுதிகளிலிருந்து இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் இந்த கூடுதல் வரி விதிப்பு மற்றும் இறக்குமதிக்கு தடை போன்ற காரணத்தினால் ஏற்றுமதியாளர்கள் மட்டுமில்லாமல் மீன்களைப் பிடித்து வருகின்ற மீனவ மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருவாடு ஏற்றுமதித் தடையால் பல ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்களும், ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கருவாடு ஏற்றுமதியை ஊக்குவிக்க மானிய விலையில் பாதுகாப்பு கிடங்குகள் கட்டவும், உபகரணங்கள் வாங்கவும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கத் தொகைகளை வழங்க வேண்டும்.
தூத்துக்குடியில் தற்போது தேக்கம் அடைந்துள்ள சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 ஆயிரம் டன் கருவாடுகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடியில் வாடகை பாதுகாப்பு கிடங்குகளில் கருவாடுகள் பல மாதங்களாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை பலப்படுத்த ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி - முதலமைச்சர் பழனிசாமி