சென்னை மண்ணடியில் வசித்துவரும் 71 வயதான முதியவருக்குத் தொடர் காய்ச்சல் ஏற்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தார். இதற்கிடையில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளின் முடிவுகள் வரும்முன்னரே அவர் உயிரிழந்துவிட்டார்.
ஆய்வு முடிவுகள் வரும்முன்னரே, அவரது உடல் சொந்த ஊரானா ராமநாதபுரம் அருகே கீழக்கரை, சின்னக்கடைப்பகுதிக்கு 3 ஆம் தேதி கொண்டு செல்லப்பட்டு, நடுத்தெரு பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தவிர அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறியும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மேலும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, குறிப்பிட்ட தெருக்களில் பொது மக்கள் நுழையவும் தடை விதித்து காவல்துறையினர் உத்தரவிட்டு, அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.