ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பழைய ரயில் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, அதிநவீன வசதிகளுடன் புதிய பாலம் கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ரூ. 280 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டது.
கடந்த 2019 செப்டம்பர் மாதம் முதல் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. கடலின் மீது 2,078 மீட்டர் தூரம் வரை, இந்த பாலம் அமைக்கப்படுகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக, அங்கு பணியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இதனால் பல மாதங்களாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. பின்னர் புரெவி புயல் காரணமாக பணிகள் தொடங்க மீண்டும் காலம் தாமதமானது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாலம் கட்டும் பணிகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு புதிய பாலம் கட்டும் பணிகள் 18 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது.
இதையும் படிங்க: வெள்ளத்தில் உடைந்த தற்காலிக பாலம்: புதிய பாலம் திறக்கப்படாததால் மக்கள் அவதி