ராமநாதபுரம்: சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த முதுகுளத்தூர் மணிகண்டன் தாயார் ராமலெட்சுமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தாக்கல்செய்துள்ளார். அதில், "எனது மூத்த மகன் மணிகண்டன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியில் இளநிலை படிப்பு பயின்றுவந்தார். கடந்த 4ஆம் தேதி மணிகண்டனை கீழத்தூவல் காளி கோயில் அருகே காவலர்கள் லட்சுமணன், பிரேம்குமார் ஆகியோர் வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
கடுமையாகத் தாக்கிய காவல் துறையினர்
மணிகண்டன் வாகனத்தை நிறுத்தாமல் செல்லவே, அவரைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு வந்து மகனை அழைத்துச் செல்லுமாறு காவல் நிலையத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. காவல் நிலையத்திலிருந்து மணிகண்டனை விரைவாக அழைத்துச் செல்லுமாறு அவசரப்படுத்தினார்.
அதிகாலை 1.30 மணி அளவில் எனது மகன் உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்விற்கு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. எனது மகனின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவுப்படுத்தப்படவில்லை.
மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும்
காவல் துறையினர் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதே மகனின் இறப்பிற்கு காரணம். ஆகவே மகனின் உடலை மறு உடற்கூராய்வு செய்யவும், முதுநிலை காவல் துறையினர் மூலம் இந்த வழக்கை விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதன் காரணமாகவே மணிகண்டன் உயிரிழந்துள்ளார். காவல் துறைத் தரப்பில் வெளியிடப்பட்ட சிசிடிவி பதிவு 2 நிமிடம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவு
இதையேற்ற நீதிபதி, மணிகண்டனின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு செய்யவும், அதனை முழுமையாக காணொலி பதிவுசெய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க: முதுகுளத்தூர் மணிகண்டன் காவல் துறை துன்புறுத்தலால் மரணம்? - விசாரிக்கக் கோரும் அண்ணாமலை