சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவிவரும் சூழலில் அங்குள்ள இந்தியர்கள் பலர் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில் அங்கு வேலை பார்த்துவந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
இதில் 17 பேர் திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற மூன்று பேரும் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்குப் பின் ராமநாதபுரம் வந்துள்ளனர். இந்நிலையில் அந்த 20 நபரில் ஒருவருக்குத் தொடர் காய்ச்சல், இருமல் இருந்ததால் அவர் பாண்டுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்பு ராமநாதபுரம் தலைமை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காகச் சென்றவரிடம் எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டது. பின்பு அவருக்கு கொரோனோ வைரஸ் உள்ளதாகத் தவறான தகவல் வெளியாகியது.
இதனால் பதற்றமடைந்த அந்த இளைஞர் உணவருந்தி வருவதாகக் கூறி சென்று மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பவில்லை. இது குறித்து கூறிய ராமநாதபுரம் சுகாதாரத் துறை இணை இயக்குநர் குமரகுருபரன் அந்த இளைஞருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதிசெய்தார்.
மேலும் சீனாவிலிருந்து வந்துள்ள 20 பேரின் இல்லங்களிலும் சுகாதாரத் துறை ஊழியர்களே நேரில் சென்று அவர்களில் யாருக்கேனும் சளி, காய்ச்சல் இருக்கிறதா எனக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: