ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகிலுள்ள நம்பு ஈஸ்வரர் கோயிலில் கல்வெட்டு உள்ளது. இதனை மாவட்ட தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. இராஜகுரு ஆய்வுசெய்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் இக்கல்வெட்டில் மொத்தம் 61 வரிகள் உள்ளன. பல ஆண்டுகளாக வெட்டவெளியில் கிடந்ததால் இதன் இரு பக்கங்களில் இருந்த எழுத்துகள் பெருமளவு அழிந்துவிட்டன. கல்வெட்டில் மன்னர் பெயர் இல்லை.
இது கோனேரின்மை கொண்டான் என்னும் அரசனின் ஆணையாகும். இக்கோயில் நம்புதாளையில் இருந்தாலும், கல்வெட்டில் தொண்டியான பவித்ரமாணிக்கப் பட்டினத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். சவசிஞான தேவரால் நிர்வகிக்கப்பட்ட ஒரு மடம் இவ்வூரில் இருந்ததை அறியமுடிகிறது.
மடத்துக்குத் தானமாக வழங்கிய நிலத்தின் எல்லை குறிப்பிடும்போது கிழக்கில் பெருவழி குறிப்பிடப்படுகிறது. இது ராஜராஜசோழனின் பெயரில் அழைக்கப்படும் கிழக்குக் கடற்கரைப் பெருவழியாகும். இதனால் பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு ராரா பெருவழி எனப் பெயர் இருந்ததாகக் கருதலாம்.
தற்போது நம்பு ஈஸ்வரர் என கோயில் இறைவன் அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் குலசேகர பாண்டீஸ்வரமுடையார் எனப்படுகிறார். இது குலசேகரப் பாண்டியன் என்னும் அரசனின் பெயரால் அமைக்கப்பட்ட கோயிலாக உள்ளது.
கல்வெட்டில் சொல்லப்படும் கங்கை நாராயண சக்கரவத்தி, திருப்புல்லாணி, தளிர்மருங்கூர், மேல்நெட்டூர், அருவிமலை கோயில் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறார். இவர் இப்பகுதியின் குறுநிலத் தலைவராகவும், அரசனின் ஆணைகளை நிறைவேற்றுபவராகவும் இருந்துள்ளார்" என்றார்.