தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் சென்னையில் குடம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம் கதிராமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பொன்பேத்தி, கொத்தமங்கலம், பாண்டிமனை ஆகிய ஊர்கள் பயன்படுத்தி வரும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சுமார் இரண்டு மாதமாகியும் அதை சரிசெய்யப்படாமல், அதிலிருந்து தண்ணீர் கண்மாயில் வீணாக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பலமுறை முறையிட்டும், அறந்தாங்கி கூட்டு குடிநீர் செயற்பொறியாளர்களிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
மாதத்திற்கு இரண்டு, மூன்று முறை மட்டுமே குடிநீர் வருகிறது. தற்போது அதுவும் வருவதில்லை. சிறிது கிலோ மீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது இந்த நிலையில் எப்போதாவது வருகின்ற தண்ணீரும் தற்போது குழாய்கள் வழியாக உடைத்துக்கொண்டு வீணாய்போகிறது . கூலி வேலை செய்யும் நாங்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து குழாய்களை சரி செய்துத்தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.