புதுக்கோட்டை: சந்தைப்பேட்டையில் உள்ள காலனியைச் சேர்ந்தவர் சித்திரைவேல். இவரது மகன் கலையரசன் (26). இவர் உழவர் சந்தை சாலையில் பன்றி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கலையரசன் இருசக்கர வாகனத்தில் சந்தைப்பேட்டை அருகே உள்ள தொண்டைமான் நகரில் பொதுமக்கள் நிறைந்துள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை சென்றபோது அவரை 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற நகர துணை காவல் கண்காணிப்பாளர் ராகவி தலைமையிலான நகர போலீசார் கொலை நடந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றியும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடனும் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த இளைஞர் கலையரசனின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையான கலையரசனின் பெரியப்பா சின்னையாவின் மகனான அதிமுக உறுப்பினர் பாரத் சேலத்தைச் சேர்ந்த அபிராமி என்ற பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து, பின்னர் 4 ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்து செய்துள்ளார். பின்னர் பாரத் இரண்டாவது திருமணம் செய்து தற்போது குடும்பம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பாரத் விவாகரத்து செய்த சேலத்தைச் சேர்ந்த பெண் அபிராமியியோடு கலையரசனுக்கு தொடர்பு ஏற்பட்டு அந்தப் பெண்ணை திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். இதை அறிந்த பாரத், கலையரசனை 20 நாட்களுக்கு முன்பு சந்தித்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என எச்சரித்துள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த கலையரசன் அபிராமியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த பாரத் நேற்று கலையரசன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தொண்டைமான் நகரில் வைத்து அவரது கூட்டாளிகள் 6 பேரை சேர்த்துக்கொண்டு சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தொழிலதிபர் சின்னையா மகன் அதிமுக உறுப்பினர் பாரத், வண்டிப்பேட்டி பகுதியைச் சேர்ந்த பாபு, வடிவேலு, வசந்தகுமார், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த வைரமுத்து, தொண்டைமான் நகர் நல்லதம்பி, கணேசன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 7 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய திமுக பிரமுகர் கைது