புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கான்ஸ்டன்ட் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற கான்ஸ்டன், ரமேஷ், பாண்டு, மோகன் ஆகிய நான்கு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து அந்த நான்கு பேரையும் கைது செய்து இலங்கை காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களுக்கு மருத்துவ முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு மீனவர்களின் படகில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால், யாழ்ப்பாணம் ஊர்காவல்துரை நீதிபதி வீட்டில் மீனவர்கள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் மூன்று நாட்கள் சிறைபிடிக்கப்பட்டு காரைநகர் கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மீனவர்கள் விசைப்படகில் தனிமைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அலுவலர்கள் முதற்கட்ட தகவலைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் 40 தமிழ்நாடு மீனவர்களையும் 6 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடல் முழுவதும் இலங்கை கடற்படை: அச்சத்தில் இரவோடு இரவாக கரை திரும்பிய மீனவர்கள்