திருச்சி மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா (19). இவருக்கு பற்கள் முன் தள்ளி இருந்த காரணத்தினால், முக அழகு குறைந்தும் உணவினை மென்று தின்பதற்கு சிரமப்பட்டும் இருந்துள்ளார். எனவே அதை ‘கிளிப்’ மூலமாக சரி செய்ய இரண்டு ஆண்டுகளாக முயற்சித்து வந்துள்ளார். அப்படியும் பற்கள் முன் தள்ளி இருந்த காரணத்தினால் மனசோர்வுற்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிசம்பர் 16ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு அவருக்கு பற்கள் மடடுமல்லாது மேல்தாடையும் முன் தள்ளி இருந்ததை கண்டறிந்தனர். ‘எக்ஸ்ரே’ மற்றும் ‘சிடி ஸ்கேன்’ பரிசோதனைகளுக்குப் பிறகு தலைமை முக சீரமைப்பு நிபுணர் சுரேஷ்குமார், உதவி மருத்துவர் பாஸ்கர், விஜயகாந்த், திவ்யா மற்றும் மயக்கவியல் மருத்துவர் கனிமொழி ஆகியோர் அடங்கிய குழு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து முகத்தை சீரமைத்தனர்.
இது பற்றி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், "முக சீரமைப்பிற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தமிழ்நாடு அரசு, மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது. அதன்மூலம் முதன் முறையாக இம்மருத்துவமனையில் முக சீரமைப்பு சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. ‘ஆர்த்தோ கினாதிக்’ அறுவை சிகிச்சை என்று சொல்லப்படும் முன்தாடை முக சீரமைப்பு சிகிச்சை சண்முகப்பிரியாவுக்கு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது முக அழகு அதிகமான காரணத்தினால் மாணவி தன்னம்பிக்கையோடு இருக்கிறார்" என்றார்.