பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் அருகே கீழ்த்தாணியம் ஊராட்சி ராமலிங்கபுரத்தில் வருவாய்த்துறை சோதனையில் அப்பகுதியில் மணல் லாரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வாகனத்தை காரையூர் காவல்துறையினர் மூலம் காவல் நிலையம் எடுத்துச் செல்ல பொன்னமராவதி வட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சரவணன் காவல்துறை சார்பில் வாகனத்தை ஓட்டிச்சென்றபோது, ராமலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்திலும், சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த அழகு(55) என்பவர் மீதும் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது.
இதில், அழகு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருசக்கர வாகனத்தில் வந்த தங்கவேலு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் அறிந்து மருத்துவமனை முன்பு கூடிய அழகுவின் உறவினர்கள், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சரவணன் மதுபோதையில் தாறுமாறாக ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாகவும் தப்பியோடிய அவரை, கைது செய்ய வலியுறுத்தியும் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் புதுக்கோடை எஸ்பி பாலாஜி சரவணன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்பு இரண்டு மணிநேரம் நீடித்த போராட்டம் கைவிடப்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எஸ்பி பாலாஜி சரவணன், " ஊர்க்காவல் படையில் பணியாற்றும் சரவணன் முறையாக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளார். கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமமும் வைத்துள்ளார். இருப்பினும் சம்பவம் குறித்து முழு விசாரணை செய்யப்பட்டு தவறு செய்தவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு!