திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம், ராஜகிரியைச்சேர்ந்த தியாகராஜன்(40) என்பவர், தனது வலது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரி செய்வதற்காக மணப்பாறை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
கடந்த நவ.4-ல் அறுவை சிகிச்சைக்காக, அறுவை சிகிச்சை அரங்கத்திற்குள் சென்றபோது மயக்க மருந்து செலுத்தும் மருத்துவர் பயமுறுத்தும் வகையில் பேசியதாகக்கூறப்படும் நிலையில், அறுவை சிகிச்சை அரங்கை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதே மருத்துவர் மயக்கமருந்து செலுத்த வந்ததால், ’தான் அறுவை சிகிச்சை செய்துகொள்ளமாட்டேன் எனவும்; மாற்று மருத்துவரை ஏற்பாடு செய்யுங்கள் என்றும், இல்லையென்றால் இன்று (நவ.9) மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளேயே உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாகவும்’ பேசி உள்ளார்.
ஆனால், நாங்கள் அவ்வாறு பேசவில்லை எனவும்; சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, மருத்துவர்கள், செவிலியர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நோயாளி தியாகராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு அறுவை சிகிச்சையை திருச்சி மருத்துவமனையில் மேற்கொள்ள வழிவகை செய்து தருவதாகக் கூறினர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு அவரை அனுப்பினர். இவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கும் மருத்துவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அரை நிர்வாணமாக்கி ராகிங் - மருத்துவ மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்