புதுக்கோட்டை: தமிழ்நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், அதன் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் என அரசு அறிவித்தது.
இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஒரு மாணவிக்கு தொற்று உறுதியானதையடுத்து 9ஆம் வகுப்பிற்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளித்து பள்ளித் தலைமை ஆசிரியர் காயத்திரி உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான மாணவி படித்த அறை பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் தெற்கு அரசு உயர்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.இதனையடுத்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளி வளாகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாணவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மீண்டும் நிபா: உறுதி செய்தது கேரள அரசு; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!