நாமக்கல், வசந்தபுரம் ஊராட்சியில் ரூ.1.70 கோடி மதிப்பில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பூரண மதுவிலக்கு என்பதுதான் தமிழ்நாடு அரசின் கொள்கையாகும்.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுபானக்கடைகள் குறைக்கப்பட்டு வருகின்றன. தற்போது அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதல் வருவாயாக கிடைக்கும். வருகின்ற கோடை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டின் மின்தேவை 17ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும்.
அந்த மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும். 21 விழுக்காடாக இருந்த மின் இழப்பை தற்போது 14 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதனை பத்து விழுக்காடாக குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை பழங்குடியின சிறுவனை கழற்ற வைத்தது குறித்த கேள்விக்கு, "அவர் தவறான நோக்கத்தில் இந்தச் செயலில் ஈடுபடவில்லை. தனது தவறை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்ட நிலையில் அதனை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியலாக்க முயற்சிக்கிறார்" என்றார்.
இதையும் படிங்க: 'நடிகர் கமல் ஒரு முட்டாள், நடிகர் விஜய் வழக்குத் தொடரலாம்'- அதிரடி சுப்பிரமணியன் சுவாமி